தினமணி 03.11.2010
பாதாள சாக்கடைத் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டு, நவ. 2: செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் நகர வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம், லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரை குப்பையில்லாத நகரமாக்க வேண்டும். நாள்தோறும் எல்லாப் பகுதிக்கும் குடிநீர் சீராகவும், சுகாதாரமாகவும் வழங்கவும், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
பாதாள சாக்கடைத் திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானம் நிறைவேற்றவும், மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் அமைந்துள்ள பஸ் பணிமனையை போக்குவரத்து இடையூறு கருதி மாற்று இடம் தேர்ந்தெடுத்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நகராட்சி தொடர்ந்துள்ள மற்றும் நகராட்சிக்கு எதிராக தொடர்ந்துள்ள பலவழக்குகள் நிலுவையில் உள்ளன.
சரியான வழக்கறிஞரை நகராட்சி உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத்தின் கடந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் அளித்த வேண்டுகோள் குறித்து பேசப்பட்டது.
செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத் தலைவர் அரிமா முருகப்பா தலைமை வகித்தார். செயலர் ஏஜிடி துரைராஜ், அமைப்புச் செயலர் ராஜீ, துணைச் செயலர் சிவகுமார், லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி நிறுவனர் டாக்டர் ராமமூரத்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.