தினமணி 03.11.2010
மின்மயானம் ஏற்படுத்தும் முதல் பேரூராட்சி
மேட்டுப்பாளையம், நவ. 2: சிறுமுகை பேரூராட்சி சார்பில் ரூ. 1.25 கோடி மதிப்பில் மின்மயான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இத்திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தும் முதல் பேரூராட்சி என்ற பெயரை சிறுமுகை பேரூராட்சி பெற்றுள்ளது.
இத்திட்ட கட்டுமானப் பணிக்கான மாதிரி வரைபடத்தை பேரூராட்சித் தலைவர் உதயகுமார் மற்றும் செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்டனர். கோவை மாவட்டம், சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ஜீவா நகரில் சுமார் 2 ஏக்கரில் உள்ள மயானத்தை சிறுமுகை மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, சிறுமுகை பேரூராட்சி சார்பில் மின்மயானம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உமாநாத் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதற்கென ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் பங்களிப்புடன் மின்மயான திட்டத்தை செயல்படுத்த சிறுமுகை பேரூராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் ராசா பரிந்துரையின்பேரில் ரூ. 21 லட்சம், தனியார், பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் ரூ. 64.50 லட்சம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 76 லட்சத்தில் மின்மயான கட்டடமும், ரூ. 40 லட்சம் செலவில் சுற்றுப்புற பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்கென பேரூராட்சித் தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் கண்காணிப்பாளர் முத்துசாமி மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் உட்பட பல பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மின்மயான திட்டங்களை பார்வையிட்டது. அதன் அடிப்படையில் ரூ. 1.25 கோடி மதிப்பில் சிறுமுகையில் மின்மயான திட்டம் அமைக்கப்பட்டு, மத்திய அமைச்சர் ராசா மின்மயான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.