தினமலர் 08.11.2010
தேனியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவக்கம்
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் 38.66 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கியது. நகராட்சியில் 22.23 சதுர கி.மீ., பரப்பளவுள்ள தெருக்களின் மொத்த நீளம் 78 கி.மீ., 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85 ஆயிரத்து 724 பேர் உள்ளனர். 33 வார்டுகளும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் கழிவு நீர் பெறப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 12.05 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது.
இதற்காக நகராட்சி பகுதியில் 56.70 கி.மீ., நீளத்துக்கு கழிவு நீர் தன்னோட்ட குழாய் அமைக்கப்படுகிறது. 2,332 கழிவு நீர் சேகரிக்கும் ஆள் நுழைவு தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கழிவு நீரேற்றும் நிலையம் கே.ஆர்.ஆர்.நகர், பங்களாமேடு, கருவேல்நாயக்கன்பட்டி பகுதிகளில் அமைகிறது. இத்திட்டத்திற்கான பூமி பூஜை கே.ஆர்.ஆர்., நகரில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் பழனிச்சாமி, குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் ரத்தினவேல், நகராட்சி கமிஷனர் மோனி, பொறியாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.