தினகரன் 11.11.2010
3 அணைகளை இணைத்து 42 கிலோமீட்டருக்கு சுரங்க கால்வாய் அமைக்க முடிவு
மும்பை,நவ.11: மும்பைக்கு கூடுதல் தண்ணீர் வழங்க குஜராத்தில் உள்ள ஒரு அணை உட்பட மூன்று அணைகளை இணைக்கும் வகையில் 42 கிலோமீட்டர் அளவுக்கு சுரங்க கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பைக்கு தற்போது விநியோகம் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீரின் அளவை அதிகரிக்க மும்பைபெருநகர வளர்ச்சி ஆணையமும் மும்பை மாநகராட்சியும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் ஓடும் தாமன்கங்கா, பிஞ்ஜார், வாக்(தானே) போன்ற மூன்று ஆற்றிலும் அணைகள் கட்டி அதிலிருந்து மும்பைக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அணைகளையும் இணைக்கும் வகையில் 42 கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்க கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மும்பைக்கு கூடுதலாக 577 மில்லியன்லிட்டர் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டியிருக்கிறது.
எனவே இதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெறவேண்டியிருக்கிறது. மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சி நிர்வாகம் இதற்கு குறிப்பிட்ட அளவு நிதியுதவி செய்யும். இத்திட்டத்தில் பெறப்படும் தண்ணீர் மீராரோடு&பயந்தர், வசாய்& விரார் பகுதியில் விநியோகம் செய்யப்படும்.