தினகரன் 15.11.2010
துணைமுதல்வர் அடிக்கல் நாட்டினார் ஈரோட்டில் ரூ15 கோடியில் மஞ்சள் வணிக வளாகம்
ஈரோடு, நவ. 15: ஈரோட்டில் ரூ15 கோடியில் மஞ்சள் வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டல் வேளாளர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சவுண்டையா தலைமை தாங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட உள்ள மஞ்சள் வணிக வளாகம், பள்ளி கட்டிடங்கள், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் புதிய கட்டிடங்கள் என ரூ.33 கோடியே 96 லட்சம் மதிப்பிலான 66 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஊராக வளர்ச்சிதுறை, சுகாதாரத்துறை, குடிநீர்வசதி, இந்து அறநிலையத்துறை உள்பட ரூ.21 கோடியே 46 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தும், தாட்கோ, சமூகபாதுகாப்பு திட்டம், தோட்டக்கலைத்துறை, மாற்றுத் திறனாளிகள் என ரூ.11 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் 730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.38 கோடி மதிப்பிலான மானியத்துடன் கூடிய சுழல்நிதி கடன், 70 மகளிர்களுக்கு ரூ.3.56 கோடி மதிப்பிலான பொருளாதார கடன் மற்றும் 200 மகளிர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நேரடி கடன் என ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நிதி என மொத்தம் விழாவில் ரூ.82.40 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்,நலத்திட்டங்களை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கே.கே.பி.ராஜா, ஜீவாசுப்பிரமணியம், குருசாமி, பழனிச்சாமி, விடியல்சேகர், மேயர் குமார்முருகேஷ், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சாமிநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் மஞ்சள் வளாகம் அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். உடன் கலெக்டர் சவுண்டையா, மாவட்ட திமுக செயலாளர் என்கேகே.பி.ராஜா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏக்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல் சேகர், யூனியன் சேர்மன் கோகிலவாணிமணிராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன், விற்பனைக்குழு வாரிய தலைவர் கணேசன்.