தினமலர் 18.11.2010
மாநகராட்சி பாதாள சாக்கடை பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ஈரோடு
: ஈரோடு மாநகராட்சியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சியில், 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சவுண்டையா நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள், ஆழ்துளை தொட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு குழாய் அளவு, தொட்டியின் அளவு, எவ்வளவு ஆழத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அளந்து ஆய்வு செய்தார். விரைவில் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஈரோடு மல்லிகை நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீரேற்று நிலையம் சிப்பம் எண் 3ன் கட்டும் பணியை ஆய்வு செய்தார். சாக்கடை நீரேற்று நிலையத்தின் மொத்த அகலம், ஆழம், நீர் வெளியேற்றும் பகுதி எவ்வாறு அமைக்கப்படுகிறது என அதிகாரிகளை கேட்டறிந்தார். கட்டப்பட்டுவரும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஜல்லி, சிமென்ட், மணல் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார். இதிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை நீர் பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பெரியார் நகர் சாக்கடை நீரேற்று நிலையம் சிப்பம் எண் 1ன் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது பணிகள் இன்னும் தொடங்காமல் இருந்ததை பார்த்த கலெக்டர் ஒப்பந்ததாரரின் மேலாளரை அழைத்து உடனடியாக பணிகளை துவங்க உத்தரவிட்டார்.
பெரியார் நகர், ராஜா கார்டன் வீதியில் அமைக்கப்பட்டு வரும் சாக்கடை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திஜி சாலையில் மாநகராட்சி சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய்சேய் நல விடுதியையும் ஆய்வு செய்தார். கலெக்டர் சவுண்டையா கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஐந்து பிரிவுகளாக 209 கோடி ரூபாய் மதிப்பில் மார்ச் 2010 முதல் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் நடக்கிறது. இதில் முதல் மற்றும் மூன்றாவது சிப்பம் கட்டும் பணிகள் தற்போது நடக்கிறது. மூன்றாவது சிப்பம் கட்டும் பணி சிறப்பாக நடக்கிறது. இப்பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். முதலாவது சிப்பம்கட்டும் பணிக்கான கட்டுமான பணி இன்னும் துவங்கப்படவில்லை. அந்த ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக பணியை துவக்க உத்தரவிட்டுள்ளேன். மற்ற மூன்று பணிகளும் ஒப்பந்தபுள்ளிகள் கோரும் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் 2012 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி இன்ஜினியர் வடிவேல் உடனிருந்தார்.