தினகரன் 19.11.2010
மாநில அரசு முடிவு பாரபுல்லா சாலை டிசம்பர் 1ல் திறப்பு
புதுடெல்லி, நவ. 19: பாரபுல்லா மேம்பாலம் பொதுமக்களுக்கு டிசம்பர் 1ம் தேதி திறக்கப்படுகிறது. இப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்துவது குறித்த தயார் நிலையில் உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியை கருத்தில்கொண்டு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது கிழக்கு டெல்லியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் இருந்து வீரர்களும் அதிகாரிகளும் ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு, போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், எளிதில் வருவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த சாலை இதுவரை திறக்கப்படவில்லை.
பொதுப்பணித் துறை, டெல்லி நகராட்சி அதிகாரிகள் மற்றும் டெல்லி போக்குவரத்து துறை போலீசார் கடந்த மாத இறுதியில் இந்த சாலையில் சோதனை நடத்தினர். போக்குவரத்தை முறைப்படுத்துவதை பற்றி அப்போது அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இப்போது போக்குவரத்தை சீர்படுத்தும் திட்டம் முழுமை அடைந்துள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு மைதானம் அருகே சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து வரும் 1ம் தேதி முதல் பாரபுல்லா மேம்பாலத்தை பொதுமக்களுக்கு திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது. பாரபுல்லா மேம்பாலம் 4 கி.மீ. நீளம் கொண்டது. ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் இருந்து மத்திய டெல்லிக்கு இந்த சாலையில் 10ல் இருந்து 12 நிமிடத்துக்குள் வந்து விடலாம். ஆஷ்ரம், லஜ்பத் நகர், தெற்கு விரிவு, பைரான் சாலை, மதுரா சாலை ஆகியவற்றில் வழக்கமாக இருக்கும் போக்குவரத்து நெருக்கடி இந்த சாலை திறப்புக்கு பின் குறைந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட பணியாக இச்சாலை ஐஎன்ஏ வரை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் இப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.