தினமலர் 20.11.2010
இன்று முதல் மாநகராட்சி எரிவாயு தகனமேடை செயல்படும்
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி எரிவாயு தகன மேடை இன்றில் இருந்து வழக்கமாக செயல்படும். இனிமேல் இதில் தான் பிணத்தை எரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகளில் எரிவாயு தகன மேடை அமைக்க தமிழக அரசு 47 லட்ச ரூபாய் அனுமதியளித்தது. தூத்துக்குடி மாநகராட்சியிலும் சிதம்பரநகர் மையவாடியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அனாதை பிணம் ஒன்று எரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த எரிவாயு தகனமேடை பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாநகாட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிணம் எரித்து சோதனை செய்த பிறகு மாநகராட்சி அதிகாரிகள் அந்த தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனடியாக எரிவாயு தகன மேடை பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் அதற்கான பொறுப்பை ஏற்று உடனடியாக இனிமேல் பிணம் எரிக்கும் பணியினை மேற்கொள்வதாக மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் எரிவாயு தகன மேடை செயல்பட துவங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இனிமேல் தூத்துக்குடியில் எல்லா பிணத்தையும் எரிவாயு தகன மேடையில் வைத்து தான் எரிக்க வேண்டும் என்பதுகட்டாயமாக்கப்படும். இது சம்பந்தமாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.