தினகரன் 25.11.2010
கழிவு அகற்ற நவீன வாகனம்
கோவை, நவ.25: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வாகனம் வாங்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக பல்வேறு இடங்களில் அசுத்தம் ஏற்படுகிறது. ரோட்டில் கழிவு வெள்ளமாக ஓடுகிறது. இதை தவிர்க்க, மாநகராட்சி பொது நிதியிலிருந்து 53.50 லட்ச ரூபாய் செலவில் 3 கழிவு நீர் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டது. இதனை மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று துவக்கி வைத்தனர். இதில் துணை மேயர் கார்த்திக், மேற்பார்வை பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர் கணேஷ்வரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், ஆளுங்கட்சி தலைவர் திருமுகம், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், கிழக்கு மண்டல தலைவர் சாமி, சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த வாகனத்தில் ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் மெஷின் உள்ளது. பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், அந்த இடத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று அடைப்பை ஜெட்டிங் கருவி மூலம் அகற்ற முடியும். எவ்வளவு ஆழத்திற்கு, நீளத்திற்கு அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் ‘டியூப்’ மூலம் அதிவேக நீர் பிரசர் மூலம் கழிவு அடைப்பு நீக்கப்படும். கழிவு அடைப்புகளை பைப் மூலம் வெளியே உறிஞ்சி எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், சரி செய்ய இனி நாள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை. ஒரிரு மணி நேரத்தில் அடைப்பு சரி செய்ய மாநகராட்சி தயாராகவுள்ளது.