Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 85 கோடியில் தொடக்கம் : அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி

Print PDF
தினகரன்      21.12.2010

ரூ. 85 கோடியில் தொடக்கம் : அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி


சென்னை, டிச.21:

அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் ரூ. 85 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடக்கவிழா, சைதாப்பேட்டை கவரை தெரு பகுதியில் நேற்று நடைபெற்றது. கட்டுமான பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். துணை ஆணையர் டேரிஷ் அகமது, துணை மேயர் சத்தியபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது

மாநகராட்சி பகுதிகளில் பருவமழையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கம் போன்ற பாதிப்புகளிலிருந்து மீட்கும் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியும் பொதுப்பணிதுறையும் இணைந்து ஜவஹர்லால் தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1447.91 கோடி செலவில் புனரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேயராக 1996ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது சென்னையில் இருந்த மொத்த மழைநீர் வடிகால்வாய்களின் நீளம் 635 கி.மீ. மட்டும் தான்.

மக்கள்படும் துயரத்தை பார்த்து புதிதாக 135 கி.மீ. நீளத்திற்கு புதிய வடிகால்வாய்களை அவர் அமைத்தார். மேலும், 84 கி.மீ. நீளத்தில் பழைய கால்வாய்களை புதுப்பித்தார். இதனால் மழைநீர் தேங்குவது பெருமளவில் தடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் மேலும் புதிதாக 171 கி.மீ. நீளத்திற்கு புதிய வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் உள்ள அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கப்படுகிறது. அதன்படி, அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரதான கால்வாய்கள் 8.40 கி.மீ. நிளத்திற்கு ரூ. 18.1 கோடியிலும், உள்ளூட்டு கால்வாய்கள் 28.19 கி.மீ. நீளத்திற்கு ரூ. 34.25

கோடியிலும் மற்றும் சேகரிப்பு கால்வாய்கள் 10.45 கி.மீ நீளத்திற்கும் ரூ. 9.54 கோடியிலும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், எம்.ஜி.ஆர். நகர் கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய், ஜாபர்கான் பேட்டை கால்வாய் மற்றும் செல்லம்மாள் கல்லூரி கால்வாய் ஆகிய 4 கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, கான்கிரீட் தரை மற்றும் வேலி அமைக்கும் பணி 4.66 கி.மீ. நீளத்திற்கு ரூ. 22.63
கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தத்தில் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் 51.70 கி.மீ. நீளத்தில் ரூ. 84.48 கோடியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மேயர் கூறினார்.