தினமலர் 24.12.2010
புதுப்பொலிவு பெறுகிறது பெசன்ட் நகர் மயான பூமி
பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் மயான பூமி கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், 1.3 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மூன்று மாதத்தில் பணிகள் முடிக்கப்படவுள்ளன. சென்னை, மாநகராட்சி சார்பில் செயல்படும் பெசன்ட் நகர் மயான பூமி தனி சிறப்பு பெற்றது. நடிகர் சிவாஜி உள்ளிட்ட மறைந்த பிரபலங்கள், இந்த மயான பூமியில் தகனம் செய்யப்பட்டுள்ளனர். தீவிர ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் உள்ளிட்டோர், தங்களுக்கு விருப்பமானவர்கள் தகனம் செய்யப்பட்ட இடத்தை காட்சிப் பொருள் போல இன்றளவிலும் பார்வையிட்டு செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பெசன்ட் நகர் மயான பூமி, மாநகராட்சி சார்பில் அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயான பூமியில் அடக்கம் செய்ய தனி இடம், 25 கார்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதிகள், நடைபாதை, அமரும் இடம், புல் தரைகள், கழிப்பிட, குளியல் வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 1.3 கோடி ரூபாய் செலவில் நவீனமாக்கப்பட்டு வரும் இப்பணிகள், கடந்த மே மாதம் துவக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, பணிகளில் சற்று தொய்வு காணப்பட்டது. தற்போது, பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. அடுத்த மூன்று மாதத்தில் பணிகள் முழுவதும் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.