தினமலர் 31.12.2010
பெருங்களத்தூரில் பூங்காக்கள் சீரமைப்பு
தாம்பரம் : பெருங்களத்தூர் பேரூராட்சியில், 75.35 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் ஐமாஸ் விளக்குகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. பெருங்களத்தூர் பேரூராட்சியில் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எட்டாவது வார்டு என்.ஜி.ஓ., காலனி மற்றும் ஒன்பதாவது வார்டு ஆர்.எம்.கே., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, 25.35 லட்ச ரூபாய் செலவில் இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு புல்தரைகள், குழந்தைகள் விளையாடும் சறுக்கு, முதியவர்கள் வாக்கிங் செல்ல நடைபாதை, நீரூற்று, பூச்செடிகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும்,பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், முக்கிய இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக 50 லட்ச ரூபாய் செலவில் ஐமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தல் மற்றும் 828 பேருக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் புகழேந்தி வரவேற்றார். தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, இவற்றை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.