தினகரன் 27.01.2011
உலகிலேயே முதல் முறையாக லம் மயானத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
சேலம், ஜன. 27:
சேலம் காக்காயன் மயானத்துக்கு, உலகிலேயே முதன் முறையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது.
சேலம் மரவனேரி கோர்ட் ரோடு காலனியில் காக்காயன் மயானம் அமைந்துள்ளது. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மயானத்தை தமிழக அரசின் நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.2.34 கோடி மதிப்பில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் நவீனமயமாக்கியது.
இங்கு 2 எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. சடலத்தை எரித்ததும், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியான மண்டபம் கட்டப்பட்டது. மயானத்தை சுற்றிலும் அழகான பூங்கா, கார் பார்க்கிங் போன்றவை அமைக்கப்பட்டன. ஜூலை மாதம் நவீன மயானம், சேலம் மாநகர மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
நவீனமயமாக்கப்பட்ட மயானத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெற சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, மும்பையைச் சேர்ந்த இன்டர்நேஷனல் சர்ட்டிபிகேஷன் சர்வீசஸ் என்ற தர நிர்ணய நிறுவனத்திடம் சேலம் மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் இந்த சான்றை மும்பை தர நிர்ணய நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தர நிர்ணய சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாநகராட்சியின் கோரிக்கையின் பேரில், காக்காயன் மயானத்தை நேரடியாகப் பார்வையிட்ட தர நிர்ணய நிறுவனத்தினர், காக்காயன் மயானத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஓ 14001:2004 தரச்சான்றை வழங்கியுள்ளனர்.