தினமலர் 10.03.2011
புதிய மீன் மார்க்கெட் திறப்பு
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் ரூ.2.38 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மீன் மார்க்கெட்டில், வியாபாரிகள் நேற்று விற்பனையை துவக்கினர்.கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுகளை முழுமையாக இடித்து விட்டு புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்தது. அதற்கான தீர்மானத்தை மன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி உக்கடத்திலிருந்து செல்லும் பேரூர் பைபாஸ் ரோட்டில் ரூ.2.38 கோடி செலவில் 68 நவீன மீன் கடைகள் கட்டப்பட்டன. அவை மின் ஏலம் மூலம் மீன் வியாபாரிகளுக்கு மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது. அதில் மீன் வளர்ச்சித்துறைக்கு இரு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஒரு சில காரணங்களால் மீன் வியாபாரிகள் பழைய கடைகளை காலிசெய்து விட்டு புதிய கடையை பயன்படுத்த தயக்கம் காட்டிவந்தனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து புதிய கடைகளை இன்று வியாபாரிகள் திறந்து வியாபாரத்தை துவக்கினர். ஏலத்தில் கடை கிடைக்காத மீன் வியாபாரிகளுக்கு தரைக்கடைகள் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதன் பின் தரைக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே மீன் மார்க்கெட் திறக்கப்பட்டதால் எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை.