தினமலர் 25.07.2012
அரியலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு
அரியலூர்: அரியலூர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை இணைந்து நடத்தும் பாதாள சாக்கடை திட்ட பணி அரியலூரில் நடந்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான பைப் லைன் அமைக்கும் பணிகள் குறித்து, அரியலூர் நகராட்சி தலைவர் முருகேசன், அரியலூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷ்னர் சரஸ்வதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.அரியலூர் சிங்கார தெரு, செந்துறை ரோடு, தோல் கிடங்கு தெரு, வடக்கு திரௌபதி அம்மன் கோயில் தெரு, கல்லூரி சாலை, ராஜாஜி நகர், காமராஜ் நகர், முனியபடையாட்சி தெரு, குறிஞ்சாங்குளம் தெரு உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.செந்துறை ரோடு, ராஜாஜிநகர், கல்லூரி சாலை உள்ளிட்ட பல இடங்களிலும், பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பள்ளங்களை, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு, உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள், நகராட்சி சார்பில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து செயல்படுத்திட, ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளரிடம், நகராட்சி தலைவர் முருகேசன் கேட்டு கொண்டார்.ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், செங்குட்டுவன், உதவி பொறியாளர்கள் சண்முகம், ராபர்ட் கென்னடி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாலா தமிழரசன், குணா, மணிவண்ணன், பாபு, மாரிமுத்து, கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.