தினமலர் 26.07.2012
பாளை.ரோட்டில் இடித்து தள்ளிய கட்டடத்திற்கு மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவு
தூத்துக்குடி : பாளை ரோட்டில் ஜெ.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்ட பெரிய கட்டடங்களை இடிக்க மாநகராட்சிக்கு ஐந்தே முக்கால் லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. இதற்கான அனுமதி கோரும் தீர்மானம் நாளைய கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாளை ரோட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படாமல் விட்டு, விட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில் மாநகராட்சிக்கு சொந்தமான நல்லதண்ணீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டடங்கள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 5 லட்சத்து 72 ஆயிரத்து 40 ரூபாய் செலவாகி இருக்கிறது. இதற்கான அனுமதிகோரும் தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை காலை பத்தரை மணிக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் நடக்கிறது. கமிஷனர் மதுமதி,துணைமேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேயர் கிளார்க் துரைமணி அஜென்டா வாசிக்கிறார். கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பொருட்டு விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விபரம் மன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான நல்லதண்ணீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள பெரிய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தியதற்கு மாநகராட்சிக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 40 ரூபாய் செலவாகியுள்ளது. இதற்கு அனுமதி கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கில் சுற்றுச்சுவர் கட்டுவதற்குரிய ஒப்பந்தப்புள்ளி உட்பட பல பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யும் தீர்மானமும் நாளைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.