தினமலர் 30.07.2012
ரூ.1.20 கோடியில் வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கல்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு, 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் மற்றும் கருவிகளை உபயோகப்படுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு இயக்க திட்டம், 2011-12ல், வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்க, 1.20 கோடி ரூபாய் அரசு நிதி வழங்கப்பட்டது.அதன்படி, 52.49 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு ஜே.சி.பி., வாகனம், 56.90 லட்சம் ரூபாயில், நான்கு குப்பைக்கலன்கள் கையாளும் லாரி, 8.55 லட்சம் ரூபாயில், ஒரு வாகனத்துடன் கூடிய கொசு மருத்து பிரயோகிக்கும் இயந்திரம், 1.55 லட்சம் ரூபாயில், கையில் எடுத்து சென்று கொசு மருந்து பிரயோகிக்கும் நான்கு இயந்திரங்கள் என மொத்தம், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்கப்பட்டு, உபயோகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், வாகனங்கள் மற்றும் கருவிகள் உபயோகப்படுத்தும் பணியை துவக்கி வைத்து, மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி, துணை மேயர் பழனிசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.துணை ஆணையர் அசோக்குமார், மண்டல தலைவர்கள் மனோகரன், காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.