தினமணி 03.08.2012
புதிய உயர்கோபுர மின்விளக்குகள் துவக்க விழா
ராமநாதபுரம்,ஆக. 2: ராமநாதபுரம் அரண்மனை மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இரு இடங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கி துவக்கி வைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக அமைக்கப்பட்டிருந்த விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கவிதா, வர்த்தகர்கள் சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ப.மு.நெ.முஜிபுர்ரகுமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கினை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் இயக்கி வைத்து பேசியதாவது:
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தெரு விளக்குகளை பராமரிக்கதமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரண்மனையிலும், புதிய பஸ் நிலையம் அருகிலும் தலா ரூ. 5.8 லட்சம் மதிப்பில் இரு உயர்கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டு இயக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் கே.சி.வரதன், வீரபாண்டியன், தவ.முனியசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அங்குச்சாமி ஆகியோர் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா நிறைவுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சரும், சிறுபான்மைக் கல்வி ஆணைய உறுப்பினருமான அ.அன்வர்ராஜா புதிய பஸ் நிலையத்தில் மற்றொரு உயர்கோபுர மின்விளக்கினை இயக்கித் துவக்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் மதிவாணன் நன்றி கூறினார்.