தினமணி 18.08.2012
கரூர் நகராட்சி துப்புரவுப் பணிக்கு ரூ. 21 லட்சத்தில் பொக்லைன் இயந்திரம்
கரூர், ஆக. 17: கரூர் நகராட்சியில் துப்புரவுப் பணிக்காக ரூ. 21.08 லட்சத்தில் வாங்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தின் செயல்பாட்டை நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.கரூர் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக வாடகைக்கு பொக்லைன் இயந்திரம் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவாகி வந்ததால், நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் வாங்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டு, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 21.08 லட்சத்தில் நவீன பொக்லைன் இயந்திரம் வாங்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற ஆணையர் ந. ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் வை. நெடுஞ்செழியன், முத்துசாமி, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.