தினமணி 23.08.2012
பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர், ஆக. 22: திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் ரூ.20.47 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.
தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திறந்தவெளி திறவிட மானிய திட்டத்தில் எல்.டி.எம். நகரில் ரூ.20 லட்சம் செலவில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
மேலும் பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி நேரில் ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் அனந்தசயனம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் முருகேசன், பேரூராட்சித் தலைவர் அமுதா முனுசாமி, கவுன்சிலர்கள் முனுசாமி, மாலதி கருணா, சங்கர், செயல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.