தின மணி 17.02.2013
விழுப்புரம் நகராட்சிக்கு ரூ. 9 லட்சத்தில் புதிய குப்பைத் தொட்டிகள்
விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக புதிதாக 47 குப்பைத் தொட்டிகள் ரூ.9 லட்சம் மதிப்பில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை விழுப்புரம் வந்தது.
விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் இதுவரை 45 குப்பைத் தொட்டிகள், ஒரு ஹைடிராலிக் லாரி மட்டுமே உள்ளதால் பெரும்பாலான தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாமல் வீடுகளில் சேரும் குப்பைகள் ஆங்காங்கே தெருக்களில் குவிந்து கிடக்கும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் நகர்மன்றத்தில், தானாக குப்பைத் தொட்டிகளை எடுத்து குப்பைகளைச் சேகரிக்கும் வகையில் ஒரு கம்பாக்டர் லாரி ரூ.29.55 லட்சம் மதிப்பிலும், இரு டிப்பர் லாரி ரூ.24 லட்சம் மதிப்பிலும், 47 குப்பைத் தொட்டிகள் ரூ.9 லட்சம் மதிப்பிலும் வாங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சென்னை பூந்தமல்லியிலிருந்து, 47 குப்பைத் தொட்டிகள் விழுப்புரம் வந்துள்ளன. இது குறித்து நகர்மன்றப் பொறியாளர் பார்த்திபன் கூறுகையில், நகர்மன்றப் பகுதிக்கு ஏற்கனவே 45 குப்பைத் தொட்டிகள் உள்ளநிலையில், கூடுதலாக 47 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகளை அன்றாடம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கம்பாக்டர் லாரி, 15 நாட்களில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.