Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடைப் பணிகளுக்காக ரூ.41.25 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

Print PDF
தினமணி           08.03.2013

பாதாள சாக்கடைப் பணிகளுக்காக ரூ.41.25 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் தகவல்


ராமேசுவரத்தில் பாதாள சாக்கடைப் பணிகளை ரூ.41.25 கோடியில் செயல்படுத்திட நிர்வாக அனுமதி கிடைத்திருப்பதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது அமைச்சர் மேலும் கூறியது: தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் எண்ணற்ற நலத்திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எந்தவித காலதாமதமும் இன்றி மக்கள் பயனடையும் வகையில் விரைந்து பணிகளை முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாவட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, திருவாடானை, ஓரியூர், தேவிபட்டினம், திருஉத்தரகோசமங்கை, நயினார்கோயில் போன்ற இடங்களில் சாலை, மின்விளக்கு, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

ராமேசுவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை மிக அதிகமாக இருப்பதால் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி சில பொருட்களை விட்டுச் செல்வார்கள். நகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி அதனை உடனுக்குடன் அகற்ற வேண்டும். ராமேசுவரத்திற்கு பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை நிறைவேற்ற அரசு ரூ.41.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணிகளை விரைவில் துவங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் குடிநீர் விநியோகம் கோடைகாலத்தில் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள் முஜிபுர் ரகுமான் (ராமநாதபுரம்)அக்சயா (பரமக்குடி), முஹம்மது மைதீன் (கீழக்கரை), ராமேசுவரம் நகராட்சி பொறியாளர் எம்.ரெத்தினவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.