தினமணி 08.04.2013
கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுரங்க கார் நிறுத்தம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் மேலும் ஒரு சுரங்க வாகன நிறுத்தம் கட்டுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களை நிறுத்த 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது அங்கு மெட்ரோ ரயில் நிலையமும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கோயம்பேடு பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோயம்பேடு பகுதியில் காலியாக கிடந்த சுமார் 7 ஏக்கர் இடம் வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தும் இடம் சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய வாகன நிறுத்தும் இடத்தில் சுமார் 400 வாகனங்களை நிறுத்தலாம். இதற்கிடையே கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்குள்ளும் சமீப காலமாக வாகன பெருக்கம் மற்றும் வாகன வருகை அதிகரித்துள்ளது.
இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த சுரங்க வாகன நிறுத்தும் இடம் உள்ளது.
இந்த நிலையில் மேலும் சுரங்க வாகனம் நிறுத்தும் இடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ரூ.20 கோடி செலவில் அந்த வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது.
இந்த புதிய சுரங்கப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களையும், 50 கார்களையும் நிறுத்த முடியும்.