தினமணி 25.09.2009
பழனி பஸ் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
பழனி, செப். 24: பழனி பஸ் நிலையத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பாளருமான டாக்டர் சத்யகோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் ஆகியோர் வியாழக்கிழமை புதிய பஸ் நிலையப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதிதாக கட்டப்பட்டுவரும் பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிற்கும் பகுதி, பயணிகளுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள், அலுவலகங்களுக்கான இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
விரைவில் பணிகள் நிறைவு செய்ய வேண்டிய நிலையில், பணிகள் அதிக அளவில் பாக்கி உள்ளதால், அக்டோபர் 31-ம் தேதிக்குள் கூடுதல் ஆட்களை பணியமர்த்தி வேலைகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் பெருமாள், ஆணையர் காளிமுத்து, பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.