தினமலர் 11.07.2013
திண்டிவனம் குப்பை கிடங்கில் ரூ.9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர்
திண்டிவனம் : திண்டிவனத்தில் குப்பை சேமிப்பு கிடங்கை சுற்றி 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மதில்சுவர் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திண்டிவனம் பகுதியில் குப்பைகளை முழுமையாக சேகரித்து அகற்ற முடியாமல் களையும் அள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது.
இந்த நகராட்சியில் மொத்தம் தேவையான 210 ஊழியர்களுக்கு பதிலாக, தற்போது உள்ள 35 துப்புரவு ஊழியர்கள் மூலமே குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் சுய உதவி குழு மூலம் 40 பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து நகராட்சி சேர்மன் வெங்கடேசன் கூறுகையில், திண்டிவனம் நகராட்சியில் கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும் நகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்படுகின்ற குப்பைகளை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் குப்பைகள் கொட்டிவைக்கும் பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மதில் சுவர் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.