தினமணி 31.07.2013
துப்புரவுப் பணிக்கு குப்பை வண்டிகள் அளிப்பு
குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நான்கு கூடைகள் கொண்ட 50 புதிய குப்பை வண்டிகள் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நகரில் உள்ள 33 வார்டுகளிலும் நாள்தோறும் வீடுகளில் நேரடியாக குப்பைகள் சேகரித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வண்டிகள் பழுதடைந்த நிலையில், புதிய வண்டிகள் வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.6 லட்சம் மதிப்பில் 50 குப்பை வண்டிகள் வாங்கப்பட்டன.
பச்சை, சிவப்பு நிறங்களில் நான்கு பிரிவுகளாக உள்ள பிளாஸ்டிக் கூடைகளில் வீடுதோறும் மக்கும், மக்காத குப்பைகளைப் பெற்று தனித் தனியே சேகரித்து அப்புறப்படுத்தும் வகையில் இந்த வண்டிகள் உள்ளன. இவற்றை துப்புரவு பணியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் மணிவண்ணன், நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.