தினமணி 01.08.2013
நகராட்சிப் பள்ளிக்கு மேஜைகள்
கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மேஜைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம், ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவர் கருணாநிதி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நகராட்சிப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஊக்கப்பரிசும், பள்ளி மாணவர்களுக்கு மேஜைகளும் வழங்கப்பட்டன.
விழாவில், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற செயலர் சீனிவாசன் கல்வி மேம்பாட்டு பயிற்சி குறித்துப் பேசினார். விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துசெல்வம், பொருளாளர் பரமேஸ்வரன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பாபு, லட்சுமணப்பெருமாள், விக்னேஸ்வரன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியை அப்பனசாமி வரவேற்றார். ரோட்டரி சங்கச் செயலர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி நன்றி கூறினார்.