தினகரன் 21.08.2013
மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஜரூர் விரைவில் திறக்க ஏற்பாடு
மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகத்திலும், அதனை சுற்றிய பகுதிகளிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், அதன் அருகிலேயே ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி ஆம்னி பஸ்களை மாட்டுத்தாவணிக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்தது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் ஆம்னி பஸ் ஏஜென்சி அலுவலகங்கள் அனைத்துக்கும் மாட்டுத்தாவணியில் அலுவலக கட்டிடம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் தற்காலிக ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சுவர், 30 புக்கிங் அலுவலகம், ஒரே நேரத்தில் 60 பஸ்கள் நிறுத்தும் வசதி மற்றும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.
இதன் பிறகு கூடுதலாக 20 புக்கிங் அலுவலகங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் செய்து திறக்கும்படி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரினர். அதன்படி ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 20 புக்கிங் அலுவலகங்கள், பயணிகளுக்கு அமருவதற்கு தனியாக நவீன வடிவிலான செட், மழை நீர் வடிகால், தார்சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா,, ஆணையர் நந்தகோபால் பார்வையிட்டு ஆய்வு நடத்தி, “பணிகளை விரைவாக முடித்து ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது, எனவே வெகுவிரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படுகிறது, அதன் பிறகு அனைத்து ஆம்னி பஸ்களும் இங்கு இயங்கும். நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறைக்க வாய்ப்பு ஏற்படும்“ என்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், `ஆம்னி பஸ்கள் இடமாற்றும் திட்டம் பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது. தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் தீர்க்கப்பட்டாலும், இன்னொரு சிக்கல் உருவாகக் கூடும். எனவே இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்து, ஆம்னி பஸ் பஸ் ஸ்டாண்டை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெருக்கடி தீர வழி பிறக்கும் என்றனர்.