தினமணி 27.09.2013
திருச்செந்தூர் பேரூராட்சிக்கு புதிய குப்பைத் தொட்டிகள், கனரக வாகனம்
திருச்செந்தூர் பேரூராட்சி சுகாதாரப் பணிக்காக ரூ.24 லட்சம் செலவில் எவர்சில்வர் குப்பைத் தொட்டிகள் மற்றும் புதிய கனரக வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளின் பொதுநிதியிலிருந்து ரூ. 24 லட்சம் செலவில் 12 எவர்சில்வர் குப்பைத்தொட்டிகள் மற்றும் கனரக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. டப்பர் பிளேசர் முறையிலான இந்த குப்பைத் தொட்டிகள் முதல்கட்டமாக திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் நாவற்பழசாலை, 3-வது வார்டு தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, சரவணப்பொய்கை அருகில், பாரத ஸ்டேட் வங்கி அருகில், வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, அரசு மருத்துவமனை முன், வீரராகவபுரம் தெரு உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் பேரூராட்சியில் ஏற்கனவே குப்பைத் தொட்டிகள் இருந்த இடங்களில் புதிய எவர்சில்வர் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, செயல் அலுவலர் கொ.ராஜையா ஆகியோர் பேரூராட்சிப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கும் இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.