தினமணி 03.10.2013
கோடம்பாக்கம் மேம்பாலத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
சென்னையில் மிகப் பழமையான கோடம்பாக்கம் மேம்பாலம் மற்றும் கோட்டூர்புரம் பாலம் ஆகியவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிகவும் பழைமையான மேம்பாலங்களில் கோடம்பாக்கம் மேம்பாலமும் ஒன்று. ரயில்வே மேம்பாலமாக கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், இன்று மிகப்பெரிய
அளவில் போக்குவரத்து நெரிசல் மிக்கதாக உள்ளது. இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு, கடந்த 1950-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்தினரால் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பாலத்தை கட்டும் பணியை மெட்ராஸ் மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் அனைத்தும் 1965-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. மிகவும் பழைமையான இந்த மேம்பாலத்தை அடிக்கடி பழுதுபார்க்கும் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில், அதை மேம்படுத்துவதற்கான நிதியை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சியில் அண்மையில் நடந்த மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
கோடம்பாக்கம் மேம்பாலம், கோட்டூர்புரம் பாலம் ஆகியவற்றை மேம்படுத்த சுமார் ரூ. 5.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கமலம்மாள் நகர், பெரிய குப்பம், கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வார்டு 2ம்) உமர்பகதூர் தெரு, உசேன் நகர் (வார்டு 115) ஆகிய பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களும், சின்ன குப்பம் (வார்டு 2) பகுதியில் உள்ள 2 பொதுக் கழிப்பிடங்களும் உபயோகமின்றி பழுதடைந்துள்ளதால் இடிக்கப்படும் 22-ம் வார்டில் புழல் காந்தி பிரதான சாலையில் நகர ஆரம்ப சுகாதார மையம், வார்டு 91 மேற்கு முகப்பேர் 3-வது பிரதான சாலையில் சமுதாய நலக்கூடம், கோடம்பாக்கம் வார்டு 112-ல் வெள்ளாள தெருவில் சமுதாய நலக்கூடம் ஆகியவை கட்டப்படும்.
வார்டு 32 மாதவரம் கங்கையம்மன் நகரில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம், ஆலந்தூர் செüரி தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ஆகியவை கட்டப்படும்.
ரூ. 2,000-த்துக்கு மேல் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்கள் மற்றும் ஐயன் திருவள்ளுவர் கலையரங்கம் ஆகியவற்றுக்கு ஒரு நாள் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் முன்வைப்புத் தொகை ரூ. 1,000-த்தில் இருந்து ரூ. 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.