தினமலர் 03.10.2013
காந்திமார்கெட்டில் ஆடு அறுக்கும் கூடம்: ரூ.1 கோடியில் கட்ட மாநகராட்சி முடிவு
திருச்சி: திருச்சி காந்திமார்கெட் பின்புறம் இறைச்சிக்காக ஆடு அறுக்கும் கூடம் உள்ளது. இங்கு போதுமான வசதிகள், நவீன வசதிகள் இல்லாததால், புதிதாக ஆடு அறுக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே உள்ள ஆடு அறுக்கும் இடத்திற்கு அருகே, அஸ்திவாரம் மட்டும் போடப்பட்ட நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
அந்த இடத்தில் இந்த நவீன கூடத்தை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அந்த இடத்தை ஆய்வு செய்தார். உடன் செயற்பொறியாளர் அருணாச்சலம், தனியார் கன்சல்டன்ட் சண்முகா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.ஆடுகளை அறுக்க தனித்தனி கேபின், கறிகளை வெளியில் கொண்டு வர கன்வேயர் பெல்ட், குளிர்பதன வசதி, அதிக எண்ணிக்கை ஆடுகளை அறுக்கும் வகையில் இரண்டு தளங்கள் வரை கட்டிடம் உள்ளிட்ட நவீன வசதிகளை உள்ளடக்கி திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு கன்சல்டன்ட் சண்முகத்திற்கு, கமிஷனர் தண்டபாணி அறிவுரை வழங்கினார்.
ஒரு ஆடு அறுக்கப்படுவதை மற்ற ஆடுகள் பார்த்தல் கூடாது, ஆடு அறுக்கும் போது மேற்கு பார்த்து நிற்க வேண்டும் உள்ளிட்ட சமூக விதிமுறைகள் படி கூடம் வடிவமைக்கப்பட உள்ளது. இதனால், திட்ட மதிப்பீடு ஒரு கோடி ரூபாயைக்கு மேல் ஆகும் என தெரிகிறது.