தினமணி 21.11.2013
அனைத்து நகராட்சிகளிலும் நவீன கழிப்பறைகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் என நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே கூறினார்.
உலகக் கழிவறை தினத்தையொட்டி பல்லாவரத்தில் நகராட்சிப் பள்ளி மற்றும் பொதுக்கழிப்பறைகளில் முழுமையான துப்புரவு மேற்கொள்ளும் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமினை நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் தொடங்கி வைத்தார்.
பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையம், கோதண்டன் நகர், சி.எல்.சி.லைன் ஆகிய இடங்களில் உள்ள கழிப்பறைகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் திறந்தவெளியினைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை ஒழிக்கும் வகையில், முழுமையான கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணி தமிழகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தாம்பரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட "நம்ம டாய்லெட்' திட்டம், பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுமையான வசதிகளுடன் தூய்மையாகவும், குறைபாடற்ற கழிவறையாக சிறந்த முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதுதான் "நம்ம டாய்லெட்' திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்.
தற்போது ஸ்ரீரங்கம், ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், சென்னை நீங்கலான அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கழிப்பறையான "நம்ம டாய்லெட்' அமைக்கும் பணி 4 மாதங்களில் நிறைவுபெறும் நகராட்சி, மாநகராட்சிகளில் அமைக்கப்படும்.
நம்ம டாய்லெட் கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.லட்சுமி, பொறியாளர் வெங்கட்ராஜ், பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் கே.எம்.ஆர். நிசார்அகமது, துணைத்தலைவர் டி.ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.