தினமணி 07.12.2013
சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிகால் வசதி
பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாமிசெட்டிபாளையத்தில் ரூ.25 லட்சத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள 6, 7-ஆவது வார்டுகளைச் சேர்ந்த பெரிய கிணறு வீதி, முருகன் மளிகை வீதி, தபால் நிலைய வீதிகளில் நீண்ட காலமாக வடிகால் வசதி குறைவாகவே இருந்தது. சவுடம்மன் கோவில் வீதி குறுகலாக இருந்ததால் அதில் இதுவரை வடிகால் வசதி செய்யப்படவில்லை. இப்பகுதி மக்கள் கழிவு நீரைத் தங்களுக்குச் சொந்தமான இடத்திலேயே தேக்கி வைத்திருந்தனர். இதையடுத்து, புதிய வடிகால் வசதி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொது நிதியின் கீழ் வடிகால் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பூமிஜையை பேரூராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
வார்டு கவுன்சிலர்கள் ஹரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தண்டபாணி, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.