தினமணி 31.12.2013
திருச்செங்கோட்டில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு
திருச்செங்கோட்டில் நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு நகராட்சியில் சிதிலமடைந்த பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் 1147 சதுர மீட்டர் கொண்டது. முதல் தளமும் இதே பரப்பைக் கொண்டதாகும்.
மொட்டை மாடியில் ரூ.10 லட்சத்தில் சோலார் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் அலுவலகத்தின் 25 சத மின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, ஆணையர் ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.