தினமணி 31.12.2013
அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம்: முதல்வர் திறப்பு
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூரில் ரயில் நிலையம் எதிரில் பேருராட்சி அலுவலகம் உள்ளது. மிகப் பழமையான இந்த அலுவலகம் நாளடைவில் சேதம் அடைந்தது.
இதனால், ரயில்வே கேட் அருகில் சமுதாயக் கூடத்தில் இயங்கி வந்தது. அவ்விடத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
இந்நிலையில், புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்தார். குத்துவிளக்கேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராமநாதன், உதவிக் கோட்டப் பொறியாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.பாலு, பேருராட்சி துணைத் தலைவர் ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.