தினமணி 03.01.2014
ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சலவையகம் திறப்பு
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் ரூ.15 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சலவையகத்தை அமைச்சர் பி.தங்கமணி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
நாமக்கல் நகரின் மையத்திலுள்ள மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாய குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக சலவைத் தொழிலாளிகள் துணிகளைத் துவைத்து சலவை செய்து வந்தனர். தற்போது புராதன நகரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை, சுற்றியுள்ள கமலாய குளம் உள்ளிட்ட பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சலவை செய்வதற்கான இடமும் நகராட்சி 12ஆவது வார்டுக்கு உள்பட்ட கொசவம்பட்டி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதியில் ரூ.15 லட்சத்தில் சலவை அமைக்கப்பட்டுள்ளது. துணிகள் துவைப்பதற்கென 10 கல்கள், அதுடனேயே 10 நீர் தொட்டிகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ள இந்தச் சலவையகத்தையே தொழிலாளிகள் இனி துணி துவைக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன், வார்டு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.