தினமணி 03.01.2014
அதிகாரப்பூர்வமாக இன்று திறக்கப்படுகிறது ஆனந்தா பாலம்
சேலம் நகரில் கட்டப்பட்டுள்ள ஆனந்தா பாலம் அதிகாரப்பூர்வ முறையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) திறக்கப்படுகிறது.
சேலம் டவுன் ரயில் நிலையச் சாலையையும், இரண்டாவது அக்ரஹாரத்தையும் இணைக்கும் வகையில் திருமணி முத்தாறின் மேல் இருந்த தரைப்பாலம், நகரில் அதிகரித்துவிட்ட போக்குவரத்தை சமாளிக்க முடியாத வகையில் இருந்தது. இதையடுத்து, அதை இடித்துவிட்டு உயர்நிலைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆனந்தா பாலப் பணிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை அதிமுக கைப்பற்றியதை அடுத்து, இடம் கையகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணுகுச் சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.
இருப்பினும் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதில் கால தாமதம் செய்யக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இரவில் ஆனந்தா பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திடீரென திறக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆனந்தா பாலத்தின் திறப்பு விழாவை அதிகாரப்பூர்வ முறையில் நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பாலத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆனந்தா பாலத்துக்கான இணைப்புச் சாலை ரூ.5.81 கோடி மதிப்பிலும், குண்டுபோடும் தெரு பாலத்துக்கான இணைப்புச் சாலை ரூ.2.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவும், 50-ஆவது வார்டு எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் ரூ.31 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கிணறு, நீர்த்தேக்கத் தொட்டி, குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், எஸ்.செம்மலை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.மோகன்ராஜ், எம்.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.