தினமணி 06.01.2014
நகராட்சிப் பள்ளிக்கு ரூ.21.25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணித் தொடக்கம்
ராணிப்பேட்டை நகராட்சி பள்ளிக்கு ரூ.21.25 லட்சம் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணியை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டையில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மைய சமையலறை ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்கள் கட்ட நகராட்சி கல்வி நிதியில் இருந்து ரூ.21.25 லட்சம் நிதி அண்மையில் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நகரமன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கலந்துகொண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கானப் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.மணி, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே.பி.சந்தோஷம், நகராட்சிப் பணி ஆய்வாளர் தமிழரசன், பள்ளித் தலைமை ஆசிரியர் மலர்கொடி, நகரமன்ற முன்னாள் உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.