தினமலர் 06.01.2014
நகராட்சியில் நாய்களை பிடிக்க ரூ.6 லட்சத்தில் புதிய வாகனம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்காக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், அதிகளவு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் அதிகளவு நடக்கின்றன. நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி சார்பில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, அரசு மானியம் 3 லட்சம் ரூபாயும்; நகராட்சி பொது நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்கப்பட்டது.
இதனை பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கமிஷனர் சுந்தராம்பாள் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி பகுதிகளில், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில், ஆறு நாய்களை பிடித்து எடுத்துச் செல்ல முடியும்.
முதற்கட்டமாக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், பெருமாள் செட்டி வீதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து, நாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
பிடிக்கப்படும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, குப்பை கிடங்கு பகுதியில், தனியாக அறை 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்ததும் இந்த கட்டடம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.