தினமணி 10.01.2014
மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம்
மாங்காடு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றும் பணியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன வாகனம் ஈடுபடுத்தப்படவுள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது மாங்காடு பேரூராட்சி. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.
இந்த பேரூராட்சியில் நாளொன்றுக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இங்கு குப்பைகள் அகற்றும் பணியில் தனியார் மூலம் 34 ஊழியர்களும், பேரூராட்சி மூலம் 21 ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த பேரூராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ரூ.1.25 லட்சம் மதிப்பில் நவீன அரவை இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குப்பைகளை அகற்ற பேரூராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:
கோயில் பகுதியான மாங்காடு பேரூராட்சியை குப்பையில்லா நகரமாக உருவாக்க, பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழக அரசின் பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீனக் குப்பை அள்ளும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாளொன்றுக்கு 15 டன் குப்பைகளை அகற்ற முடியும் என்றார் அவர்.