தினமணி 22.01.2014
மேற்கு மண்டலத்தில் ரூ.61 லட்சம் செலவில் திட்டப் பணிகள் துவக்கம்
கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.60.50 லட்சம் செலவில் வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
மேற்கு மண்டலம் 11-ஆவது வார்டு கே.கே.புதூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் முதல் பிரசவம் பார்த்துக் கொண்ட தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கான உடைகள், நாப்கின், கொசுவலை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி புதன்கிழமை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார்.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 3 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்து, அந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.
மேற்கு மண்டலம் 5, 8 மற்றும் 9-ஆவது வார்டுகளில் ரூ.60.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 5 வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றைத் திறந்து வைத்து, மழைநீர் வடிகால் கட்டும் பணியையும் ஆணையாளர் க.லதா முன்னிலையில் மேயர் செ.ம.வேலுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மேற்கு மண்டலம் 9-ஆவது வார்டில் அம்பேத்கார் நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை மேயர் திறந்து வைத்தார். 5-ஆவது வார்டு கவுண்டபாளையம் அசோக் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 5 வணிக வளாக கடைகளையும் திறந்து வைத்தார்.
8-ஆவது வார்டு சிவகாமி நகர் பகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் பாலம் அமைக்கும் பணிகளையும் பூமி பூஜை செய்து மேயர் தொடங்கி வைத்தார்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட 84-ஆவது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.26.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கத்தையும், ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டபட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டடத்தையும், 83-ஆவது வார்டு பெரிய கடைவீதி மாநகராட்சி பள்ளி சத்துணவு மைய கட்டடம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளாச்சி நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதையும் மேயர் செ.ம.வேலுசாமி அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர்துரை முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் சாவித்திரி, ஆதிநாராயணன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், நகர பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர்கள் சுப்ரமணியன்;, ரவி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி, பணிகள் குழுத்தலைவர் அம்மன் அர்ச்சுணன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.