தினமணி 24.12.2009
பேரூராட்சிக்கு மூன்று சக்கர டிப்பர் ஆட்டோ
பெரம்பலூர், டிச. 23: பெரம்பலூர் மாவட்டம், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மூன்று சக்கர ஆட்டோவை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர டிப்பர் ஆட்டோ வாங்கப்பட்டது.
இந்த வாகனம், பெரம்பலூர் மாவட்டம், லெப்பைகுடிகாடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மக்கும், மக்கா குப்பைகளைத் தரம் பிரித்து திடக்கழிவு மேலாண் கூடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்படும். அந்த வாகனத்துக்கான சாவியை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். சம்பந்தத்திடம், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் புதன்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, லெப்பைகுடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் க.திலகம், துணைத் தலைவர் எஸ். நூர்ஜகான் சம்சுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.