தினமணி 11.01.2010
திண்டுக்கல்லில் இருந்து கடையநல்லூருக்கு ராட்சத கொசு மருந்து தெளிப்பான் இன்று வருகை
கடையநல்லூர், ஜன.10: கடையநல்லூரில் காய்ச்சலின் தீவிரத்தை தணிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல் ராட்சத புகை இயந்திரம் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்படவுள்ளது இதற்காக திண்டுக்கல்லில் இருந்து இந்த இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சலைத் தடுக்கும் வகையில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும், நகரை ஆறு பகுதிகளாகப் பிரித்து 20 தினக்கூலி பணியாளர்களின் மூலம் அபேட் மருந்து வீடு, வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழு மூலம் நகராட்சிப் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணாபுரம் மற்றும் பேட்டை பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர்களிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், திண்டுக்கல்லில் இருந்து ராட்சத புகை இயந்திரம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் மூலம் நகரம் முழுவதும் திங்கள்கிழமை முதல் கொசுப் புகைஅடிக்கப்படவுள்ளது. எனவே, கொசுப் புகை வீடு முழுவதும் பரவும் வகையில் பொதுமக்கள் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.