தினமணி 16.01.2010
குடந்தை நகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரி செய்யும் வாகனம்
கும்பகோணம், ஜன. 15: கும்பகோணம் நகராட்சிக்கு புதை சாக்கடை குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய ரூ. 29.70 லட்சத்தில் புதிய நவீன கருவிகள் அடங்கிய வாகனம் அளிக்கப்பட்டது.
இந்நகராட்சியில் 110 கி.மீ தூரம் புதைச் சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு ஒரு சில பகுதிகளில் சாக்கடை நீர் அந்த குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதைத் தொழிலாளர்கள் மூலமே சரி செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையை மாற்றி நவீன கருவிகள் மூலம் அடைப்பு சரி செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 29.70 லட்சம் மதிப்பீலான அனைத்து நவீன கருவிகளும் பொருத்தப்பட்ட புதிய வாகனம் வாங்கப்பட்டது.
இநத வாகனத்தின் சாவி வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி இந்த வாகனத்தின் சாவியை நகராட்சி ஓட்டுனரிடம் வழங்கினார்.
இதில் நகரசபைத் தலைவர் சு.ப. தமிழழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரா. துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் க. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.