தினமலர் 17.02.2010
ஆடுதுறை பேரூராட்சியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
ஆடுதுறை : ஆடுதுறை பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
திருவிடைமருதூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தமிமுனிசா, குறு குழந்தைகள் மைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார். திருவிடைமருதூர் ஒன்றிய ஆணையர் பிரேமாவதி, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்குமார், சுந்தரஜெயபால் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் கோ.சி.மணி பேசியதாவது: ஆடுதுறை பேரூராட்சி கடந்த காலங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் நகராட்சிக்கு இணையான வகையில் பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பேரூராட்சி வீரசோழன் திருமண மண்டபம், அனைத்து வசதிகளோடு கூடிய பஸ் ஸ்டாண்டு, உயர் கோபுர மின்விளக்கு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை கடைவீதியில் உயர்கோபுர மின்விளக்கில் 4 பல்புகள் எரியவில்லை. இதனை அதிகாரிகள் உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். இதேபோல் பிரச்னைகளை மக்களும், தாங்கள் கண்டவுடன் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோ.சி.மணி பேசினார். பேரூராட்சித் தலைவர் மகேஸ்வரி வரவேற்றார். கவுன்சிலர் சரவணகுமார் நன்றி கூறினார்.