தினமலர் 17.02.2010
உதயேந்திரம் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்
வாணியம்பாடி:உதயேந்திரம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உதயேந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அதன் அலுவலக வளாகத்தில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் மணி, செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். இதில் 13க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உதயேந்திரம் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகம் கட்டுவது, மேட்டுப்பாளையம், பள்ளிப்பட்டு மற்றும் பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், மேலும் புதிதாக தெருவிளக்குகள் அமைத்தல் உட்பட 15க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சிலர் தங்களது வார்டுக்கு அடிப்படை வசதிகள் கேட்டும் வலியுறுத்தினர். இதற்கு தலைவர், மனு எழுதிக் கொடுங்கள் அதனை மன்றத்தில் தீர்மானம் வைத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கழிவுநீர் தேங்கி குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனையும் மன்றத்தில் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கூறினார். இதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் மனுவாக எழுதிக் கொடுங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.