தினமணி 19.02.2010
சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி நிராகரிப்பு
கோவை, பிப்.18: சாலை சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் இருந்து கோவை நிறுவனத்தை நிராகரித்து மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வதற்கு முன்பும், பின்பும் இருவேறு விதமான தகவல்களை அந் நிறுவனம் தெரிவித்ததால், ஒப்பந்தப்புள்ளி திறனாய்வுக் குழு இம் முடிவை எடுத்துள்ளது.
வியாழக்கிழமை நடந்த மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாணமைத் திட்டத்துக்கு ரூ.1.54 கோடியில் சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி குறித்து விவாதம் நடைபெற்றது. கோவை நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்வது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஆணையர் அன்சுல் மிஸ்ரா, குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த கோவை நிறுவனம், ஆஸ்திரேலிய நிறுவனத் தயாரிப்பு இயந்திரத்தை உள்நாட்டு வாகனத்தில் பொருத்தி கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தது.
ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் இருக்கும்போதோ, தங்களது தயாரிப்பு இயந்திரத்தையே சப்ளை செய்வதாகக் கூறியது.
இதுகுறித்து மாநகராட்சியின் திறனாய்வுக் குழுவில் கோவை நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கவும், அதற்கு அடுத்தாக குறைந்த புள்ளிகள் கோரியிருந்த புணே நிறுவனத்திடம் இயந்திரத்தை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.
மறுடெண்டர் விட வேண்டும் என, மாநகராட்சி மன்ற மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் சி.பத்மநாபன் வலியுறுத்தினார். மாநகராட்சியின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்தார்.