தினமலர் 22.02.2010
ஜெனரேட்டர் வாங்குகிறது மாநகராட்சி
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மின்சாரம் தடைபடும் சமயத்தில், குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க, ஒன்பது நீரேற்று நிலையங்களில் 1.60 கோடி ரூபாய் செலவில் ஜெனரேட்டர் நிறுவ, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், வரும் 25ல் நடக்க உள்ள மாமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்க, ஒன்பது நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபடும் சமயத்தில், நீரேற்று நிலையங்களில் குடிநீர் வினியோகம் தடைபடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெனரேட்டர் நிறுவ மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் 2009-10ம் ஆண்டுக்கான இடை நிரப்பு நிதியில் 50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது. மீதி, 1.10 கோடி ரூபாயை மாநகராட்சி குடிநீர் நிதியில் இருந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், வரும் 25ம் தேதி நடக்கும் மாமன்ற கூட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது.