தினமலர் 09.03.2010
சுரங்க நடைபாதை அமைக்க கூடுதல் நிதி: அனைத்து கட்சி கூட்டத்தில் வேண்டுகோள்
கோவை : கோவை மாநகராட்சியில் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க நிதி ஒதுக்க, பட்ஜெட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.கோவை மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் உதயகுமார் பேசியதாவது: அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேசன், காந்திபுரம், உக்கடம், கிராஸ்கட்ரோடு பகுதிகளில் சுரங்கநடைபாதை அமைப்பதற்கும், ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிகளுக்கு நிதி வருவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. நகரில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளதால் மாநகராட்சி நிதியை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் போது, சுடுகாட்டையொட்டியுள்ள ஸ்கீம் ரோட்டில் பாலம் அமைத்தால், வெள்ளலூருக்கு போத்தனூரை சுற்றி குப்பை எடுத்துச்செல்லும் தூரம் குறையும். போக்குவரத்து எளிமையாகும். காங்., தலைவர் திருமுகம்: காந்திபுரம் மத்திய, நகர, திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் வகையில் லிப்டுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் போது, மல்ட்டிலெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டை கோவையின் முன்மாதிரி ரோடாக மாற்றவேண்டும். மாநகராட்சி பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாநகராட்சி நிதியிலிருந்து ஸ்னாக்ஸ் வாங்கிக்கொடுக்க நிதி ஒதுக்க வேண்டும். இ.கம்யூ.,கல்யாணசுந்தரம்: மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வாங்கும் போதே பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்வேண்டும். பூங்கா இல்லாத வார்டுகளில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். கொசு அடிக்கும் பேட்டை இலவசமாக வீடுதோறும் வழங்க வேண்டும் என்றார்.
நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க., ராஜ்குமார், மா.கம்யூ., முருகேசன், பா.ஜ., கோமதி, தே.மு.தி.க., சிவக்குமார், நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர