தினமணி 17.03.2010
சென்ட்ரல் மார்க்கெட் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவுறும்
மதுரை, மார்ச் 16: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய சென்ட்ரல் மார்க்கெட் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவுறும் என மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி தெரிவித்தார்.
சென்ட்ரல் மார்க்கெட்டின் கட்டுமானப் பணிகளை மேயர் கோ.தேன்மொழி, கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் கோ.தேன்மொழி கூறியதாவது:
மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டை மாற்றம் செய்து, தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் புதிய மார்க்கெட் அமைக்கும் பணி 80 சதம் முடிவுற்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு 542 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், மேட்டுப்பகுதிகள் சிறு வியாபாரிகளுக்கும், தரைக் கடை வியாபாரிகளுக்கும் எனத் தனித்தனியாகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பணி முடிந்தவுடன் இந்த மார்க்கெட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்கவுள்ளார் என்றார்.
ஆய்வுப் பணியில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர் (வருவாய்) ரா.பாஸ்கரன், நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.